பஸீல் காரியப்பரை இலங்கை வானொலியில் B.H. அப்துல் ஹமீட் பேட்டி காணுகிறார். அந்த அனுபவத்தை, பாவலர் பாராட்டு மலரில் இப்படி அவர் பதிவு செய்திருக்கிறார்:
"சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி,
"இவ்வளவு ஆற்றலுள்ள நீங்கள், ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை?" நான் கேட்டேன்.
புன்சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார்,
"எழுதியிருக்கிறேன் - பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகிறதே எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய 'அழகான ஒரு சோடிக் கண்கள்."
அவர் சொல்லக் கேட்டதும் நான், என்னை அறியாமலேயே இருக்கையை விட்டு எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.
பாடல் பதிவாகி ஒளிபரப்பானது 1966 இல்; பேட்டி நடந்தது 1978இல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யார் என்று அறியப்படாமலேயே இலங்கையிலும் இந்தியாவிலும் இப்பாடல் பிரபல்யமானது.
எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று கேட்டபோது, அவர் சொன்னார்:
"நேயர்கள் ரசிக்கிறார்கள், நிலையம் ஒளிபரப்புகிறது, சந்தோசம். கவிஞன் காணாமல் போய், கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய் இருப்பது ஒரு சுவையான அனுபவம்.
"தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான புகழைக் கூட லட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது?"
பஸீல் காரியப்பர் இயற்றி, ஈழத்து மெல்லிசை முன்னோடிகளில் ஒருவரான எம்.கே. றொக்சாமியின் இசையில் எஸ். கே. பரராஜாசிங்கம் பாடிய, பலரையும் கவர்ந்த அந்த மெல்லிசைப் பாடல் இதோ!
அழகான ஒரு சோடிக் கண்கள்
அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனமொரு பாலை!
ஆட்சியியல் மறு பாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும் !
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய்மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்!
'ஏய்' என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்!
வித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்
வீட்டாரறிந்தால் கண்ணந் தடிக்கும்!
1966
குறிப்பு: புத்தகத்தில் வந்துள்ள எழுத்து வடிவத்திற்கும் மூலப் பாடலின் வரிகளிற்கும் இடையே, ஒரு சில வரி வேறுபாடுகள் உள்ளன. கவிஞர் பின்னர் திருத்தியிருக்கக் கூடும்.
***
அவரது இன்னொரு கவிதைதான் 'நட்டுமை போகவில்லை.' நட்டுமை என்றால், நெல் வயலில் தண்ணீர் பாய்ச்சி வரவைகளில் வரம்புகள் கட்டியிருக்கும்போது, நண்டு துளைத்தோ அல்லது எப்படியோ நீர் களவாகச் செல்லும் வழி .
போடியாரின் கள்ள எண்ணத்திற்கு எதிரான ஒரு பெண்ணின் எதிர்க்குரலை -கோபக் கனலை - கிராமிய மொழியில் கவிதையாகியிருக்கும் அழகுதான் 'நட்டுமை போகவில்லை.'
போடிமாரின் அடக்குமுறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் எதிரான கலகக் குரலின் அற்புதமான வெளிப்பாடு. அதிலும் பெண்ணின் எதிர்ப்புக் குரல் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
நட்டுமை போகவில்லை
புள்ளட வாப்பா! நமக்கிந்தப்
போட்டியார்கிட்ட வெள்ளாமை வேணா
வெள்ளன சுபஹுல வந்தான்
உங்கள விசாரிச்சான் இல்ல எண்டன்
வள்ளென்று நம்மட நாயும் குலச்சிச்சி
வாசல்ல நிண்டவன் உஞ்சில்ல குந்திட்டான்
வெள்ளாமைக்கு ஒரு ஆள் வைக்கப் போறானாம்
விருப்பமாம் உங்கள்ள இஞ்சப் பாருங்க
பிச்சைக்குப் போனாலும் நமக்கிந்தப்
போக்கிரிக் கிட்ட. வெள்ளாமை வேணா
கொச்சையாக அவன் என்னைப் பாத்தான்
குடலை எடுத்து மாலையாய்ப் போடணும்
இச்சைப் படுறான் போல என்னில இந்த
இளிச்சவாயன்; ஊர் ஊராய் சிரட்டை நீட்டி
பிச்சைக்குப் போனாலும் அவனுக்கிட்ட இனி
பொழப்பு ஒண்டும் நமக்கு வேணா.
கொள்ளையாக் கதைச்சங்கா அந்த ஆள்
கோபம் எண்டால் பத்திக்கு வந்திச்சு
பிள்ளை ஒண்டுக்கும் சுகமில்லையாம் - அவன்ர
பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்
வெள்ளிக்கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்
வீட்ட வரட்டாம் ஒரு வேல இருக்காம்
கள்ளச் சிரிப்பும் அவன்ர கால்ல ஒரு சப்பாத்தும்
வெள்ளாமைக்காரன் பொண்டாட்டி எண்டா
வேசி எண்டா இந்த நாய் நினைச்சான் ?
1976
இதன் இலக்கிய நயத்தையும் சமூக பொருளாதார பரிமாணத்தையும், இதற்கு மேலும் இங்கு விரிவாக எழுத முடியாது.